Tuesday, October 21, 2008

அறிபுனைக் போட்டி முடிவு - ஒரு அதிருப்தி - அறிபுனை எழுத்தாளர்களுக்கு எச்சரிக்கை

நான் இதை எழுதியிருக்கக் கூடாது. இருந்தாலும் மனம் கேட்கவில்லை. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிபுனைக் கதைகள் போட்டி முடிவுகள் ஒரு வழியாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தகுமார், ஸ்ரீதர் நாராயணன், சேவியர், மூவரும் பரிசுக்குத் தகுதியானவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் கதைதான் ரொம்பவே நெருடுகிறது. போட்டி நடத்தப்பட்டது அறிவியல் புனைக்கதைகளுக்கு. ஆனால் முதல் பரிசு பெற்ற கதை, அந்த வகையில் அடங்காது என்பது எனது கருத்து. அது ஒரு வித்தியாசமான கதையே தவிர, அறிவியல் புனைவு அல்ல. வசந்தகுமார், இந்த போட்டிக்காக கிட்டத்தட்ட 15 கதைகள் எழுதிய நிலையில், அவற்றில் ஒரு அறிவியல் புனைவு கூடவா பரிசுக்கு சிக்கவில்லை?

ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை கூட, போட்டிக்கு வந்த அவரது மற்ற கதைகளை விட சில படிகள் குறைவான கதைதான் என்பது எனது கருத்து. ஆனால் ஒவ்வொருவர் ரசனையும் வேறு விதமாக இருக்கலாம் என்பதாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அறிவியல் புனைவு கூறுக்குள் அடங்குவதாக இருப்பதாலும், இந்த விஷயத்தை விட்டு விடலாம்.

பரிசு கொடுப்பது, மேலும் அது போன்ற ஆக்கங்கள் தொடர்ந்து வர ஊக்குவிப்பதற்குத்தான். அதனால், பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்கள் எழுதிய மற்ற சிறந்த கதைகளை விட, இது போன்ற கதைகளை தொடர்ந்து எழுதினால்தான் அவை அறிபுனை கதைகள் என்று ஏற்றுக் கொள்ளப்படும், என்று மனதளவில் நினைக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது. போட்டிக்கு எழுதிய மற்ற எழுத்தாளர்களும், அறிவியல் கூறுகளோடு கதை எழுதினால், அவை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால், அறிபுனை எழுத்தாளர்களே!! இந்தப் போட்டியின் முடிவு உங்களது எண்ணங்களையும், ஆக்கங்களையும் பாதிக்காமல், தொடர்ந்து அறிவியல் கூறுகள் கொண்ட அறிபுனை கதைகளையும் எழுதி, தமிழில் அந்தக் கூறு மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!

எனது இந்த நிலையை முதல் பரிசு பெற்ற நண்பர் இரா.வசந்த குமார் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்!!

Wednesday, October 15, 2008

மேலும் ஒரு மீம்

இந்த மீம் தொடருக்கு யாராவது அழைத்தால் நாசூக்காக மறுத்து விடவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். நர்சிம் செல்லில் அழைத்தபொழுதுகூட "இல்லை. முடியாது" என்ற வார்த்தைகள் தொண்டை வரை வந்து விட்டது. ஆனால் அவர் குரலில் என்ன மாயம் இருந்ததோ தெரியவில்லை, "ஓ! போட்டுறலாம்" என்று சொல்லிவிட்டேன். அதனால் இதைப் படித்துவிட்டு யாராவது திட்டவேண்டும் என்றால் நர்சிம்மையே திட்டவும். எல்லாப் பழியும் நர்சிம்முக்கே!!

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சிறு வயதில் தியேட்டரில் பார்த்த படம் எவையெவையென்று நினைவில் இல்லை. வீட்டில் விசிஆரில், கர்ணன் படம் அதிகதடவை பார்த்தது நினைவிலிருக்கிறது. அதில் வரும் போர்க்களக் காட்சிகள் அந்த வயதில் மிகவும் கவர்ந்தது.
வீட்டோடு அல்லாமல் தனியாக திரையரங்கில் பார்த்த முதல் படம் பம்பாய். அப்புறம் வயதுக்கு வந்தபின் சில சொல்லக்கூடாத படங்கள்...

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. ஆங்கில படத் தழுவலாயிருந்தாலும் கூட, அதை நல்ல முறையிலேயா வெங்கட் பிரபு, தமிழ் ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார் என்பது எனது கருத்து. ஆனால் பாடல்கள் வேஸ்ட்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ஏதோ ஒரு டிவியில் ஊமை விழிகள். அது எடுக்கப் பட்ட காலகட்டத்தில், இந்தப் படத்தின் ஒளிப்பதிவு நன்றாயிருக்கிறது என்று தோன்றியது.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அப்படி எதுவும் தாக்கி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனதாக நினைவில்லை. பொதுவாக மணிரத்னம் படங்கள் கொஞ்சம் என்னை அசைத்துப் பார்க்கும். அவ்வளவுதான்.

5.அ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நிறைய பேர் சொல்லி விட்டதைப்போல், பாட்ஷா பட வெற்றிவிழா சம்பவத்துக்குப் பின், ரஜினி ஜெவுக்கு எதிராக வாய்ஸ் கொடுத்ததுதான். ஏனென்றால் எம்ஜிஆர் அரசியல் பிரவேசத்தின் போது நான் பிறக்கவில்லை.
5-ஆ) உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
கணிணி வரைகலைதான். முன்பே ராஜபார்வையிலிருந்து கமலும், அஞ்சலியிலிருந்து மணிரத்னமும்(அதற்கு முன்பு ஏதாவது இருக்கிறதா?) கிராஃபிக்ஸை தங்கள் படங்களில் உபயோசித்திருந்தாலும், ஷங்கர்தான் அதை சரியான படி தமிழ்திரையுலகினருக்கு அறிமுகப்படுத்தி மார்க்கெட் செய்தார். அது தமிழில் இன்னும் பெர்ஃபெக்ஷன் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
முன்பு குமுதம், விகடன், வாரமலரிலிருந்து... சினிக்கூத்து வரை விடாமல் வாசித்திருக்கிறேன். இப்பொழுது வலைப்பதிவுகளில் படிப்பதோடு சரி.

7.தமிழ் சினிமா இசை?
ரஹ்மான் வரும் முன்பு வரை திரை இசையில் அவ்வளவாக ஆர்வம் இருந்தது கிடையாது(அப்ப கர்நாடக இசையில் ஆர்வம் இருந்ததான்னெல்லாம் கேட்கக் கூடாது). அதற்கப்புறம் ரஹ்மானின் தீவிர விசிறி. இப்பொழுது இளையராஜா, வித்யாசாகர், ஹாரிஸ், அவ்வப்போது யுவன் என்று ரசிக்க முடிகிறது. பழைய பாடல்களை(டி.எம்.எஸ், சீர்காழி,ஏ.எம்.ராஜா, கண்டசாலா, PBS) சிறுவயதில் வானொலி மூலம் கேட்டுப் பழகியதால், எப்பொழுதுமே அவை எனது ஃபேவரைட்.(இசை பற்றி மட்டும் கேட்டதால் பாடல்கள்/வரிகள் சாய்ஸில் விடப்படுகிறது).

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்திய சினிமாவில் இந்தி சினிமாக்கள் பலவும், தெலுங்கு படங்கள சில பலவும் மட்டும் பார்த்திருக்கிறேன். உலக சினிமாவில் ஹாலிவுட்டையும், ஜாக்கி சான், ஜெட்லி தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. பொதுவாக சைன்ஸ் ஃபிக்ஷன் வகையறாக்கள் பிடிக்கும், ஒரு சில பீரியட் படங்களும்!! பாதித்த சினிமா என்பதை தவிர்த்து, பார்த்து வியந்த படங்கள் பல இருக்கின்றன. சார்லியின் ”தி கிரேட் டிக்டேட்டர்”ல் இருந்து, ராபர்ட் ஸெம்மிக்ஸின் ”பேக் டூ தி ஃபியூச்சர்” வழியாக, வசௌஸ்கி சகோதரர்களின் ”தி மேட்ரிக்ஸ்” வரை ஹாலிவுட்டின் தொழில்நுட்ப ரீதியான அசத்தல்களை கண்டு பிரமித்திருக்கிறேன்.

9. அ) தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
இது ஒரு நல்ல்ல்ல கேள்வி!! அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. சுஜாதாவின் கீழ் ஒரு பிராஜக்டில் சில காலம்(ஒரு மாதம்) பணியாற்றிய பொழுது, அவர் அந்நியன் கதையை எழுதி முடித்து விட்டிருந்தார். அது பற்றி அவரின் உதவியாளரிடம் கதையின் ஒன்லைன் என்ன என்று கேட்ட அளவுக்கு மட்டுமே எனது நேரடித்(?!) தொடர்பு.
9. ஆ) பிடித்ததா?
ஓ! ஒன்லைன் என்ன என்று கேட்டது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அது எனக்கே தெரியாது என்று அந்த உதவியாளர் சொன்னதுதான் பிடிக்கவில்லை.
9. இ) அதை மீண்டும் செய்வீர்களா?
இப்பதான் எனக்கு முழுப்படமும் தெரியுமே. அப்புறம் எதுக்கு மறுபடியும் ஒன்லைன் கேட்கனும்?!
9. ஈ) தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
தமிழ் இயக்குநர்களுக்கு அவர்கள் இயக்கும் படங்களின் ஒன்லைன் சரியாக புரிந்தாலே தமிழ் சினிமா இன்னும் மேம்பட்டு விடும் என்பது எனது கருத்து!

10. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பெரிதாக ஒன்றும் நடந்து விடாது என்றே நினைக்கிறேன். பல பேர் கொஞ்ச நாள் பேஸ்த் அடித்தாற் போல் இருப்பார்கள். அப்புறம் வேறு ஏதாவது பொழுதுபோக்கை நாடிப் போய் விடுவார்கள். அந்த பொழுதுபோக்கை தருவதற்குரிய மீடியாவும் உருவாகிவிடும். ஒரு காலத்தில் புத்தகமும், தொடர்கதையும் படித்தவர்கள், தொலைக்காட்சி, மெகா சீரியல், இணையம் என்று மாறி விடவில்லையா?


கோர்த்து விடுவது

இது பற்றி யோசித்ததில் ஒரு பதிவே போடும் அளவுக்கு விஷயம் இருப்பதாகத் தோன்றியதால், தனிப்பதிவாக இட்டிருக்கிறேன். அதை இங்கே சொடுக்கி படித்துக் கொள்ளவும்.

Friday, September 12, 2008

தமிழ்மணம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

சிறிது நேரத்திற்கு முன்பு, பாரிஸ் திவா, மங்களூர் சிவாவின் பெயரை வைத்து இட்டிருந்த அருவருப்பான பதிவின் தலைப்பை பார்க்க நேர்ந்தது. அதை எதிர்த்து இடப்பட்டிருந்த பின்னூட்டங்களின் புண்ணியத்திலேயே, ரொம்ப நேரம் தமிழ்மண முகப்பில் தெரிந்தது. இப்பொழுது அது நீக்கப்பட்டுவிட்டது, என்றாலும், செய்த தவறுக்கு பாரிஸ் திவா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காத பட்சத்தில் தமிழ் மணம் ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? மேலும அவர் பதிவில் பல புதிய படங்களின் வீடியோக்களையும்(முழுப் படம்) போட்டிருக்கிறார். இது திருட்டு வீடியோ குற்றமில்லையா? குறைந்த பட்ச நாகரிகமும் கிடையாது, குறைந்தபட்ச நேர்மையும் கிடையாதா?

Thursday, September 11, 2008

பிரபல பத்திரிக்கையின் தமிழார்வம்?!

தற்செயலாக "நாணயம் விகடன்" அட்டைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
"ஐ போன்
என் 96
எது பெஸ்ட்?"
என்ற தலைப்பு கண்ணில் பட்டது. ஐ போன் தெரியும். அது என்ன "என் 96" என்று சில நிமிடம் தடுமாறினேன். அப்புறம் அது "N96" என்று புரிந்தது. அடடே, பரவாயில்லையே! தமிழார்வம் ஓவரா இருக்குதே, என்று எண்ணியவாறே வலது புறம் பார்த்தபொழுது(அதே பக்கத்தில்)
"32 பக்க
L.K.G. இணைப்பு
கிரெடிட் கார்டு"
என்று இன்னொரு தலைப்பு. "L.K.G"யை "எல்.கே.ஜி" என்று எழுதினால்கூட எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அளவில் அந்த வார்த்தை நமக்குத் தெரியும். அதை "LKG" என்றே போட்டிருக்கிறார்கள். ஆனால் N96ஐ "என் 96" என்று போட்டால் எத்தனை பேருக்கு சட்டென்று புரியும். தமிழார்வம் ஓவர்னா LKGஐயும் "எல்.கே.ஜி"னே போட்டிருக்கலாமில்லையா? ஸோ, தமிழார்வம் சுத்தமாயில்லை. அப்புறம் என்ன "என் 96" வாழுது? "N96"னு போட்டா படிக்கிறவனுக்காவது புரியுமில்ல? தமிழார்வம் ஃபுல்லா அரிச்சு போச்சுங்க!!!

Monday, September 8, 2008

கூகிள் க்ரோம் - தமிழ் தட்டச்ச முடியவில்லை

கூகிள் க்ரோமில் சில வசதிகள் இருந்தாலும், பல குறைபாடுகள் இருக்கின்றன. பீட்டா வெர்ஷன் என்பதால் பொறுக்கலாம். நான்கைந்து Tabகளுக்கு மேல் திறந்தால் தொங்க ஆரம்பித்து விடுகிறது. கூகிளின் தளங்களிலேயே கூட சிலது சரியாக திறக்க மாட்டேன்கிறது. முக்கியமாக கூகிளார், யூனிகோடை எப்படி ஹாண்டில் செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமாயிருக்கிறது.

நான் தமிழில் தட்டச்ச NHM உபயோகிக்கிறேன். யூனிகோடு தமிழில், மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களில் அகர வரிசை தவிர மற்றவைகளும், இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களின் கூட்டு எழுத்துக்கள். உதாரணத்திற்கு, க் என்பது "க" என்ற எழுத்தும், புள்ளி என்ற எழுத்தும் சேர்ந்த கூட்டெழுத்து. அதுபோல "ஜே" என்பது "ஜ" மற்றும் "ஏ" எழுத்துக்களின் கூட்டெழுத்து. நமது தட்டச்சு மென்பொருள்கள் எல்லாம், இதை மனதில் வைத்தே வடிவமைக்கப் பட்டவை. ஆனால் க்ரோம், இந்த கூட்டெழுத்துக்களை ஒரே எழுத்தாக பாவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

சோதித்துப் பார்க்க, ஐ.இயிலோ, ஃபயர் ஃபாக்ஸிலோ ஏதாவது ஒரு தளத்தை(தட்டச்சுவதற்கு உகந்ததாக) திறக்கவும். இப்பொழுது அதில் "க்"என்றை எழுத்தை தட்டச்சுங்கள். பின் பேக் ஸ்பேஸை(Back Space) அழுத்திப் பாருங்கள். "க்" என்பது "க"வாகிவிடும். மேலும் ஒரு முறை பேக் ஸ்பேஸை அழுத்தினால்தான் முழு எழுத்தும் மறையும்.

ஆனால் அதே தளத்தை க்ரோமில் திறந்து, "க்" அடித்து, பேக் ஸ்பேஸை(Back Space) அழுத்திப் பாருங்கள். முதல்முறையே முழு எழுத்தும் அழிந்து விடும். நமது தட்டச்சு செயலிகள் சரியாக க்ரோமில் செயல்படாததற்க்கு காரணம் இதுதான்.

நமது செயலிகள், நாம் தட்டச்சும் பொழுது, நமக்குத் தெரியாமலேயே, இந்த பேக் ஸ்பேஸை பல சமயங்களில் உபயோகிக்கின்றன. நீஙகள் ரோமனைஸ்டு முறையில் தட்டச்சுகிறீர்களென்றால், "க" என்று எழுத "k"யை முதலிலும், "a"யை அடுத்தும் அழுத்துகிறீர்கள். உங்கள் செயலி என்ன செய்கிறது? நீங்கள் "k"யை அடித்ததும் "க்", அதாவது "க"+புள்ளிக்கான குறீயீடுகளை ஸ்கீரீனில் கொட்டி விடுகிறது. அடுத்ததாக "a"யை அழுத்துகிறீகள். இது உயிரெழுத்து. அதனால் முந்தின எழுத்து மெய்யெழுத்தா என்று பார்த்தால் ஆமாம் மெய்யெழுத்து. அதனால், இதை அந்த மெய்யுடன் கலந்து உயிர்மெய்யாக்க வேண்டும். அதாவது மெய்யெழுத்திலுள்ள புள்ளியை நீக்க வேண்டும். இதற்கு சுலபமான வழி ஒரு பேக் ஸ்பேஸுக்கான(Back Space) ஆணையை அனுப்புவதுதான். அதுவே நமது செயலிகளாலும் செய்யப்படுகிறது.

ஆனால் க்ரோம் இப்பொழுது இந்த யூனிகோடு எழுத்துக்களை ஒரே எழுத்தாக பாவிப்பதால், புள்ளி மட்டும் நீங்குவதற்கு பதிலாக முழு எழுத்தும் அழிந்து விடுகிறது. கூகிள்காரர்கள் எந்த ஸ்டான்டர்டை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

இது எனது சந்தேகம் மட்டுமே. பிரச்சினை வேறு மாதிரியும் இருக்கலாம்.

கடைசியாக வந்த தகவல் : NHM புதிய வெர்ஷன் க்ரோமில் வேலை செய்கிறது. இந்த கடைசித் தகவல் அதன் மூலம் க்ரோமில் தட்டச்சப்பட்டது. தகவல் கொடுத்த பாலாவுக்கும், செயலி எழுதிய நாகராஜ்ஜுக்கும் நன்றி!!!

Sunday, April 13, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் எனது இனிய மிழ் புத்தாண்டு வாழ்த்துக்ள்

Thursday, January 31, 2008

புகைப்பதை நிறுத்துவது எப்படி?


மார்க் ட்வெய்ன் ஒரு முறை சொன்னாராம், "புகைப்பதை நிறுத்துவதென்பது எளிதான விஷயம். நான் 1000 தடவைகள் அந்த மாதிரி நிறுத்தியிருக்கிறேன்" என்று.

புகைப்பதை நிறுத்துவதற்கு எளிதான வழியென்று Cold Turkey முறை என்று ஒன்று சொல்கிறார்கள். முதலில் புகைப்பதை நிறுத்துவதற்கான ஒரு நாளை தேர்ந்தெடுக்கவும். இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தள்ளி ஒரு நாளை தேர்ந்தெடுப்பது உத்தமம் என்கிறார்கள். பிறகு அந்த நாளை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக புகைக்கும் பழக்கத்தை குறைத்துக் கொண்டே சென்று, குறிப்பிட்ட நாளில் சுத்தமாக நிறுத்தி விட வேண்டும். ஆனால் இது ஆகிற வேலையாக எனக்குப் படவில்லை.

ஒரு கணவனிடம் மனைவி ஒருத்தி முறையிட்டாளாம், "என்னங்க, என் தம்பி சந்நியாசம் வாங்கப் போகிறானாம். கொஞ்சம் கொஞ்சமா உலக ஆசைகளையெல்லாம் ஒன்னு ஒன்னா விட்டுகிட்டிருக்கான்."

அதற்கு கணவன் "கவலைப்படாதே! உன் தம்பி கண்டிப்பா சந்நியாசியா ஆக மாட்டான்" என்று ஆறுதல் சொன்னானாம்.

உடனே மனைவி, "அதெப்படி உறுதியா சொல்றீங்க?"

கணவன், "இப்படி கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சந்நியாசி ஆக முடியாது. அதனால உன் தம்பி சந்நியாசி ஆக மாட்டான்" என்று சொன்னான்.

அதற்கு மனைவி "பின்னே கொஞ்சம் கொஞ்சமா ஆகாம, எப்படி சந்நியாசி ஆவாங்க?" என்று கேட்டாளாம்.

உடனே கணவன் "இப்படித்தான்" என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி சந்நியாசியாகி போய் விட்டானாம்.

புகைப்பது, குடிப்பது போன்றவைகளையும் இப்படித்தான் டக்கென்று ஒரு நிமிடத்தில் முடிவெடுத்து ஒரேயடியாக விட்டு விட வேண்டும். ஆனால் இப்படி நிறுத்துவதற்கு, சந்நியாசம் வாங்க எவ்வளவு மனப்பக்குவம் தேவையோ அந்தளவுக்கு மனவலிமை தேவை.

சரி, "டக்"

நிறுத்தியாயிற்று. 10 நிமிஷம் ஆயிற்று. 30 நிமிஷம். ஒரு மணி நேரம் ஆயிற்று. அடுத்த தம் போட வேண்டிய நேரம். "தம் அடிக்க கூடாது என்று முடிவெடுத்து விட்டாலும் அந்த தம் அடிக்க வேண்டும் போல் இருக்கும் உணர்வு வரும்பொழுது என்ன செய்வது?"

அந்த மாதிரி உணர்வு ஏற்படும் நேரத்தில், யாரிடமாவது பேசுங்கள், சிறிது காலாற நடை போடுங்கள்(அப்படியே நடந்து பெட்டிக்கடைக்கு போய் விடாதீர்கள்!), தண்ணீர் குடித்து பாருங்கள். செய்யும் வேலையில்/வேறு ஏதாவது பொழுதுபோக்கில் முழு கவனத்தையும் செலுத்த முயலுங்கள்.

"தினசரி சாப்பிட்டவுடன் ஒரு தம் அடித்து பழகியாயிற்று. இப்பொழுது திடீரென்று எப்படி அதை மாற்றுவது?"

டோட்டலாக தம் அடிப்பதுடன் சம்பந்தப்பட்ட அந்த பழக்க முறையையே மாற்றுங்கள். உதாரணத்திற்கு, சாப்பிட்டவுடன் தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமாக சாப்பிடும் இடத்தில் சாப்பிடாமல் வேறு இடத்தில் சாப்பிடுங்கள். காபி குடித்தவுடன் தம் அடிக்க வேண்டுமா? காபி குடிக்கும் நேரத்தில் டீ குடித்து பழகுங்கள். காலையில் ஆஃபீஸ் வரும் வழியில் நின்று ஒரு தம் அடிப்பவராக இருந்தால், வழக்கமான வழியை மாற்றி புது வழியில் வர முயலுங்கள். இது போல் தம் அடிக்கும் செயலுடன் சம்பந்தப்பட்ட மற்ற பழக்க முறைகளில் இருக்கும் ஒழுங்கு முறைகளை உடைத்துப் போடுங்கள்.

"நான் இது போல் பல தடவைகள் தம்மை விட முயன்றிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் முடியவில்லையே. என்ன செய்ய?"

திரும்பவும் முயலுவோம். தவறில்லை. சென்ற தடவைகளில் தம்மை விட முயன்ற பொழுது என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை ஞாபகப்படுத்தி, அவற்றை தவிர்க்க முயலுங்கள்.

முக்கியமான தேவை மனவலிமை. முதல் மூன்று நாட்கள் தாண்டுவது மிகக் கடினம். அதற்குபின் கொஞ்சம் பழகிவிடும். தொடர்ந்து மூன்று மாதம் இருந்து விட்டால், அப்புறம் சுத்தமாக நினைவையே விட்டு விடலாம்.