Tuesday, June 30, 2009

கனவும் கற்று மற

தடதடதட... தடதட.

கதவு தட்டப்பட்டது. தலைமாட்டிலிருந்த என் வாட்சை இழுத்து, தூக்க கண்களுடன் மணி பார்த்தேன். 3.40.

'இந்த நேரத்தில் யார்?'

மெதுவாக எழுந்து கதவைத் திறந்தேன். வந்திருந்தவர் குற்றத் தடுப்பு உயரதிகாரி போல் உடையணிந்திருந்தார்.

"என்ன?"

"மிஸ்டர் விசி, அடையாள எண் 12034557..?"

"நான் தான்."

"அரசாங்க விஞ்ஞானி இல்லையா? அதனால்தான் முதல் வரிசை அடையாள எண் கிடைத்திருக்கிறது" என்றபடி அவர் பாட்டுக்கு கொஞ்சம் கூட மரியாதையில்லாமல் உள்ளே நுழைந்து, என்னுடைய ஃபோல்டபுள் குஷன் சோஃபாவை ஆக்கிரமித்தார்.

"எக்ஸ்கியூஸ் மீ. நீங்கள்...?"

"பார்த்தால் தெரியவில்லையா? பை தவே மிஸ்டர் விசி, உங்களை கைது செய்கிறேன்?"

"வாட்? எதுக்கு?"

"நீங்கள் அரசாங்கத்துக்குத் தெரியாமல், ரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டதிற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கின்றன."

"அப்படியொன்றும்.."

"பிராஜக்ட் ரஜா", நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன். "எங்களுக்கு எல்லாம் தெரியும்." என்று மெல்லிய குரலில் கூறினார்.

'தெரிந்து விட்டது. என்ன செய்யலாம்?'

"அது ஒன்றும் அரசாங்க விரோத அராய்ச்சி அல்ல. அது ..."

"பிறகு ஏன் அரசாங்கத்துக்கு அறிவிக்காமல் ரகசியமாக ஆராய்ச்சி செய்கிறீர்கள்? விசி, இந்த தேசத்தில் நீங்கள் ஒருவர் மட்டும்தான் விஞ்ஞானியா என்ன? உங்களைப் போன்ற பல விஞ்ஞானிகள் கண்டுபிடித்த, உங்களுக்கே தெரியாத பல நவீன டெக்னாலஜிகள் எங்களிடம் உள்ளன. அப்படியில்லையென்றால் இந்த தேசத்தில் குற்றத்தடுப்பு சாத்தியம் இல்லை."

எனக்கு வியர்த்தது. 'விஷயம் முழுமையாக தெரிந்து விட்டது. இப்பொழுது கைது செய்வதாக கூறினாலும் அங்கே மரணம்தான் காத்திருக்கிறது. நான் ஒன்றும் ஏமாந்தவனல்ல. கைதாகி விட்டால் தீர்ந்தது.'

என் கால்கள் லேசாக வாசல் நோக்கி திரும்பியதுமே, அவர் கைகளில் அடாமிக் கன் முளைத்தது.

"நோ அதர் தாட்ஸ் விசி." குரலில் கேலியே இருந்தது. அவர் கைகளுக்கும் எனக்கும் பத்தடி இருந்தது.

அடுத்த நொடியே என்னுடைய கைகளில் அதே கன். "ஸாரி மிஸ்டர். நான் இப்பொழுது போக வேண்டும்.", கன் ட்ரிக்கரை அழுத்த்த்தியே விட்டேன்.

'பவ்' என்ற மிக மெல்லிய ஒலி. அவர் மார்புக்கு மிக அருகே நிறைய ரத்தம்.
கொ...ன்..று....

சட்டென்று ஏற்பட்ட உணர்வில், விழித்துப் பார்த்த நான் தலைமாட்டிலிருந்த வாட்சை எடுத்துப் பார்த்தேன். 3.35

முகமெல்லாம் வியர்த்து இருந்தது. 'எவ்வளவு பயங்கர கனவு? ரகசிய ஆராய்ச்சி..? நான் அப்படியேதும் செய்யவில்லையே? அதற்கு ஒரு பெயர் வேறே. ரஜா. இந்த மாதிரி வார்த்தையை எப்பொழுதாவது கேட்டிருக்கிறேனா? எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கொலை வேறு!! அதிகாரியின் கையிலிருந்த கன் எப்படி என் கைக்கு வந்தது? ஏன் இப்படியொரு கனவு வந்தது?'

தடதடதட... தடதட.

கதவு தட்டப்பட்டது.

எனக்கு பயம் கொடுத்தது. 'ஏதாவது பழைய ஆங்கிலப் படங்கள் போல், உண்மையிலேயே கனவில் வந்தது நிஜத்திலும் நடக்குமோ? ஆனால், நான் தான் அப்படி எந்த ஆராய்ச்சியும் செய்யவில்லையே.'

மெதுவாக சென்று கதவை திறந்தேன். வந்திருந்தவர் சாதாரணமாக நைட் டிரஸ்தான் போட்டிருந்தார். கனவில் வந்த முகம் வேறு மாதிரி இருந்ததாக ஞாபகம்.

"மிஸ்டர் விசி, அடையாள எண் 12034557..?"

"நான் தான்."

"தூக்கத்தில் எழுப்பியதற்கு மன்னிக்கவும். உங்களை கைது செய்ய வேண்டியிருக்கிறது."

"வாட்? எதுக்கு?" நடுங்கினேன்.

அவர் மெதுவாக புன்னகைத்து, "மிஸ்டர் விசி. நீங்களே ஒரு அரசாங்க விஞ்ஞானி. கனவுகளைக் கூட நாங்கள் ஸ்கான் செய்வோம் என்று உங்களுக்குத் தெரியாதா? உங்கள் கனவில் ஒரு குற்றப்பிரிவு அதிகாரியை கொன்றதற்காகவும், அரசுக்கெதிரான ரகசிய ஆராய்ச்சி பற்றிய எண்ணங்கள் மனதில் முளை விட்டதற்கும், உங்களை கைது செய்கிறேன்."

“ஸீ. நான் அந்த மாதிரி ரகசிய ஆராய்ச்சி எதுவும் செய்யலை. அது ஒரு...”

“இது வரை செய்யவில்லை. இனிமேல் செய்ய முனையலாம். உங்கள் கனவுகள் உங்களை வழிநடத்தலாம். எண்பது சதவீதம் குற்றங்களும், கண்டுபிடிப்புகளும் கனவுகளிலிருந்தே பிறக்கின்றன. அதற்காகத்தான் இந்த கனவு ஸ்கானிங் டெக்னாலஜியை எங்கள் குற்றத் தடுப்புப் பிரிவு தத்தெடுத்துக் கொண்டது.”

எனக்கு வியர்த்தது. என் கருவிழிகள் வாசலுக்கு ஒருமுறை ஓட, அவர் கைகளில் அந்த அடாமிக் கன் முளைத்தது.

“பைத்தியக்காரத்தனமாக ஏதும் செய்யாதீர்கள் மிஸ்டர் விசி.”. அந்தத் துப்பாக்கி என் தலையை தீவிரமாக முறைத்தது.

அவர் என்னை நோக்கி ஓரடி எடுத்து வைக்க, தரையில் புரண்டு கொண்டிருந்த படுக்கையை சுவரோடு கட்டுவதற்கு உபயோகிக்கும் ஸ்ட்ராப், அவர் ஷூவுக்கு மேலான சாக்ஸைப் பிடித்து இழுக்க, என்னை நோக்கி முன்னே சரிய, அவர் கையிலிருந்த கன்...

என்னுடைய கைகளில் அதே கன்.

தடதடதட... தடதட.




Thursday, June 25, 2009

தொடர முடிந்த தொடர் விளையாட்டு

வலையுலகில் இதுவரை நடந்த பல தொடர் விளையாட்டுக்களில் எனக்குள்ள சங்கடம் என்ன என்பதை முன்பே இங்கே விளக்கியுள்ளேன். இந்த 32 கேள்வி பதில் தொடருக்கு சினேகிதி சகாராத் தென்றல் அழைத்தபொழுதும் அதைத்தான் சொன்னேன். ஆனாலும் இப்பொழுது 32 கேள்விகளுக்கு ஏன் பதில் எழுதியிருக்கிறேன் என்று 15வது கேள்விக்கான பதிலைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
முதன் முதலாக ஆரம்பித்த வலைப்பதிவு யோசிங்க. அதற்காக யோசிப்பவர் என்று வைத்துக் கொண்டேன். நானே வைத்துக் கொண்ட பெயர் இது. பிடிக்காமலா வைத்துக் கொண்டிருக்கிறேன்?!

2) கடைசியா அழுதது எப்போது?
இந்தக் கேள்விக்கு பதில் படிக்குமுன் இங்கே சென்று 1-அவுக்கான பதிலை படித்து விடவும்.
கடைசியா அழுதது பல மாதங்களுக்கு முன்பு. துக்கம் தொண்டையைத் தாண்டி கண்களை அடைய விடுவதில்லை!!;-)

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
தற்பொழுது நான் கையால் எங்கேயெல்லாம் எழுதுகிறேன் என்று யோசித்துப் பார்த்தால், கடன் அட்டை மூலமாக பொருட்கள் வாங்கப் போடும் கையெழுத்து, சில அலுவலக கட்டிடங்களுக்குள் நுழைய எண்ட்ரி கையெழுத்து. அவ்வளவுதான். அவையும் ஆங்கிலத்தில்தான். தமிழில் பேனா பிடித்து எழுதுவதற்கு இப்பொழுதெல்லாம் பயமாயிருக்கிறது. படிக்கும் காலத்தில் என்று பார்த்தால், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என்று எந்த மொழியாயிருந்தாலும் பாரபட்சமில்லாமல், என் கையெழுத்து ஆகக் கண்றாவியாக இருக்கும். பிடிக்குமா?!

4) பிடித்த மதிய உணவு?
காரமாக பொரித்த அசைவ உணவுகள். அதற்காக தினமும் அவற்றை சாப்பிட முடியாது. எனக்கு வெரைட்டி இருந்தாக வேண்டும்.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?
அந்த வேறு யாராவது யார் என்று தெரிந்தால்தானே சொல்ல முடியும். அந்த வேறு யாராவதாய் இருக்கும்பொழுது, என்னென்ன விருப்பங்கள்/வெறுப்புகள் இருக்குமோ!?

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
எது அருகில் இருக்கிறதோ அது. கடலருகில்தான் பிறந்ததும் வளர்ந்ததும். நீச்சல் பழகியதோ ஆற்றில். வருடாவருடம் குற்றாலத்து சீஸன் விசிட்டை தவற விட்டதில்லை. மொத்தத்தில் தண்ணீர் இருந்தால் போதும். எது என்பது முக்கியமில்லை!!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
முகம். முக்கியமாக கண்கள்.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?
பிடித்தது - எதிலும் எப்பொழுதும் Perfectionistஆக இருக்க விரும்பும் நினைப்பு.
பிடிக்காதது - நிஜத்தில் அப்படி இருக்க முடியாதது.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
இந்தக் கேள்வியை சாய்ஸில் விடுகிறேன்.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
முன்பு வருந்தியிருக்கிறேன். இப்பொழுது வருந்துவதில்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
இதெல்லாம் என்னக் கேள்வி, அந்தரங்கத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டு?!:-(

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
என் குழந்தையின் சிணுங்கல்களை.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இப்படி இஷ்டத்துக்கெல்லாம் கேட்கக் கூடாது. யாருப்பா கொஸ்டின் செட் பண்ணினது?

14) பிடித்த மணம்?
எல்லா நாற்றங்களும். கூவம் கூட! ஏனென்றால் இதைத்(நுகர்வதை) தவிர்க்க முடியாது.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
பிடித்த விஷயம் - நான் அழைத்தவுடன் என்னைப் போல பந்தா எதுவும் செய்யாமல் உடனே ஒத்துக் கொண்டார்.
அழைக்கக் காரணம் - அவர் ஒருவர்தான் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பொதுவாக கவிதைகள் என்றாலே எனக்கு அலர்ஜி. ஆனால் என்னையும் தங்களது சில கவிதைகளால் படிக்கத் தூண்டியவர்களில் சகாராத் தென்றலும் ஒருவர். குறிப்பிட்டு இந்தப் பதிவு/கவிதை பிடிக்கும் என்று சொல்லத் தோன்றவில்லை. ஆனால் இவர் இன்னும் வெவ்வேறு தளங்களிலும் கவிதை எழுதினால் நன்றாக இருக்கும் என்று என்னை நினைக்க வைத்தவர்.

17) பிடித்த விளையாட்டு?
பொதுவில் சொல்லக் கூடாது.

18) கண்ணாடி அணிபவரா?
ஒரு காலத்தில்.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
நாடகத்தனமில்லாத நடிப்பு கொண்ட எல்லாவகையான திரைப்படங்களும். கதையம்சத்தில் நாடகத்தனம் இருக்கலாம்.

20) கடைசியாகப் பார்த்த படம்?
காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி.(Gods must be crazy)

21) பிடித்த பருவ காலம் எது?
மழைக்காலம். பாக்கெட்களில் எதுவுமில்லாமல், நம்மை நம்பி கூடவும் யாருமில்லாவிட்டால், மழையில் நனைந்து கொண்டு வண்டியோட்ட ரொம்பப் பிடிக்கும்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
எந்தப் புத்தகம் கடைசியாக படித்து முடித்தீர்கள் என்று கேட்டால் பொருத்தமாயிருக்கும். புத்தகத்தை எடுத்து விட்டால் அதை முடிக்கும் வரை வேறு வேலை ஓடாது. கடைசியாகப் படித்தது சுஜாதா நினைவுப் புனைவு 2009 - பரிசு பெற்றக் கதைகள். கடைசியாக படித்தவற்றில் பிடித்த புத்தகம் - தேவனின் சிறுகதைத் தொகுப்பு மாலதி.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
முன்பு அடிக்கடி மாற்றுவேன். இருபது நிமிடத்துக்கொருமுறை மாற்றுவதற்கு தனி ஸாஃப்ட்வேரே வைத்திருந்தேன். இப்பொழுதெல்லாம் மாற்றுவதேயில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
அழகிய வெட்க மௌனம். ஆளில்லா கொடூர மௌனம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்திய தேசத் தலைநகரம்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
அப்படியொன்றும் எனக்கென்று தனித்திறமை கிடையாது. உங்களுக்கு இருக்கும் திறமைகளில் ஏதாவது ஒன்று வேண்டுமானால் இருக்கலாம். எனக்கே எனக்கான தனியான திறமை ஒன்றும் கிடையாது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
நான் ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடி முழுகிப் போய்விடுமா? மேலும் அப்படிப்பட்ட விஷயங்கள், எனக்கு அடிக்கடி மாறிக் கொண்டேயிருக்கின்றன.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சோம்பேறித்தனம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
ஒரு இடத்துக்கு திரும்பத் திரும்பப் சுற்றுலா போவது பிடிக்காது. புதிய புதிய இடங்களுக்கு செல்லவே ஆசை, அவை சுற்றுலாத் தலமாக(தலம் சரியா? தளம் சரியா?) இல்லாவிட்டால் கூட. (குற்றாலத்தை சுற்றுலாத் தலப் பட்டியலில் நான் சேர்க்க மாட்டேன்.)

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி வேணா இருக்க ஆசை.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
சொல்ல முடியாத காரியம்.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க
நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் - புரியவில்லை!!!

கடைசியாக இதைத் தொடர நான் அழைக்க விரும்புவது இரா. வசந்தகுமார்(ஏற்கனவே சொல்லி வச்சாச்சு!!). வசந்தகுமாரும் நானும் புரட்டிப் போட்ட படைப்புகள் குழுவில் இருந்தாலும், நான் அவரது எழுத்துக்களை படிக்கத் தொடங்கியது சிறில் அலெக்ஸ் நடத்திய போட்டியின் போதுதான். மனிதர் அந்தப் போட்டிக்கு மட்டுமே கிட்டத்தட்ட 15 கதைகளை ஒரு மாத காலத்துக்குள் எழுதி அயரடித்தார். அதற்கப்புறம் ஃபோன் மூலம் பரிச்சயம். சிறுகதை என்பதின் நெளிவு சுளிவுகளை நன்கறிந்தவர் என்பது இவரது கதைகளைப் படித்தாலே புரியும். சமீபத்தில் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ள அவரை 32ஐ தொடர்ந்து அடித்து ஆட அழைக்கிறேன்.

Wednesday, June 3, 2009

தேவனும் சுஜாதாவும்

தேவன் எப்பொழுதுமே எனது ஃபெவரைட். கிட்டத்தட்ட (கிட்டத்தட்டதான்) அவரின் புத்தகமாக வெளிவந்த அனைத்து சிறுகதைகளையும் வாசித்திருக்கிறேன். இன்று தேவனின் ஒரு சிறுகதை தொகுப்பான மாலதி(கிழக்குப் பதிப்பகம்) புத்தகம் வாசிக்கக் கிடைத்தது. அதில் இரண்டு சிறுகதைகள் தவிர மற்ற அனைத்தும் நான் இதுவரை வாசிக்காதவையே! அதில் ஒரே ஒரு கதையின் சாராம்சத்தை மட்டும் இங்கே விவரிக்கலாம் என்று நினைக்கிறேன். அந்தக் கதையின் பெயர் விசித்திர நகரம்.

ஒரு பெரிய இரும்பு வியாபாரி சாகக் கிடக்கிறார். அவரை ஒரு இன்சூரன்ஸ் ஏஜண்ட் போல் இருக்கும் ஒரு வாலிபன் வந்து சந்தித்து, அவர் வியாபாரம் ஆரம்பித்த விவரம் குறித்து விசாரிக்கிறான். அந்த சம்பாஷனையில், அவர் தனது நண்பனின் பணத்தை முதலீடு செய்ததும், பின்னர் அந்த நண்பனையே ஏமாற்றி துரத்திவிடுவதும், அவன் சோற்றுக்கு வழியில்லாமல் செத்துப் போனதும், அவன் குடும்பமும் நசிந்து இறந்து போனதும் நமக்குத் தெரிய வருகிறது. அடுத்த சீனில், அந்த பெரிய மனிதர், ஒரு பெரிய நகரத்தில் ரயிலிலிருந்து இறங்குகிறார். அந்த இன்சூரன்ஸ் ஏஜண்ட் அவரை வழிகாட்டி அழைத்துப் போகிறான். அந்த நகரத்தின் வனப்புகளை பார்த்து வியந்தவாறே அந்த பெரிய மனிதர் போய்க் கொண்டிருக்கிறார். அங்கே, பட்டணத்தில் இருக்கும் தனது பங்களாவைப் போலவே ஒரு பங்களா இருக்க, அது தன்னுடையதுதான் என்ற மயக்கத்தில் உள்ளே நுழைய முயல, அந்த ஏஜண்ட் அவரைத் தடுக்கிறான். பெயர்ப் பலகையைக் காட்டுகிறான். அதில், அவர் தொழிலுக்கு முதல் போட்ட, ஏமாற்றப்பட்ட அந்த நண்பனின் பெயர் இருக்கிறது. அப்பொழுதுதான் அந்த புது நகரம் என்பது மறு உலகம் என்பது வாசிக்கும் நமக்கு உணர்த்தப்படுகிறது. பூவுலகில், அவர் நண்பன் முதல் போட்டத் தொழிலில் அவர் பணம் சேர்க்க சேர்க்க, இங்கே அதே அளவுக்கு செல்வம் அந்த நண்பன் கணக்கில் ஏற்றப்பட்டுள்ளது. அப்புறம் கெட்டவனுக்குத் தண்டனை என்னும் நீதிப்படி அவருக்கு ஒரு கச்சடாவான ஓலை கூட இல்லாக குடிசையே அவர் தங்க வேண்டிய இடம் என்பதாகக் கதை முடிகிறது.

சரி, இப்பொழுது இந்தக் கதைச் சுருக்கத்தை படித்தபின் உங்களுக்கு வேறு ஏதாவது/யாராவது நினைவுக்கு வருகிறதா/றார்களா?

.



.


.


.


.


.

.

.

.

.

.

எனக்கு சுஜாதாவின் வாசல் கதையும், தர்மு மாமா கதையும் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை. ஓகே, ஓகே, ஓகே. சுஜாதா காப்பியடித்தார் என்றா சொல்கிறாய், என்று நீங்கள் என்னுடன் சண்டை பிடிக்க கிளம்புமுன், ஒரு சில வரிகள். இரண்டு பேரின் கதைக் களங்களும் வேறு வேறுதான். அதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சுஜாதாவின் தர்மு மாமா கதையின் கான்செப்ட் தனி, வாசல் கதையின் கான்செப்ட் தனி. தேவனின் இந்த ஒரே கதையில் இந்த இரு கான்செப்டுகளும் இணைந்தே வருகின்றன. சுஜாதாவின் கதைகளில் கிடைத்த அந்த ஒரு கிரிஸ்ப்னஸ் தேவனின் கதையில் கிடைக்கவில்லைதான்.

இந்த மூன்று கதைகளையும் படித்தவர்கள் தங்கள் கருத்துக்களையும் கூறலாம்.