Friday, September 12, 2008

தமிழ்மணம் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?

சிறிது நேரத்திற்கு முன்பு, பாரிஸ் திவா, மங்களூர் சிவாவின் பெயரை வைத்து இட்டிருந்த அருவருப்பான பதிவின் தலைப்பை பார்க்க நேர்ந்தது. அதை எதிர்த்து இடப்பட்டிருந்த பின்னூட்டங்களின் புண்ணியத்திலேயே, ரொம்ப நேரம் தமிழ்மண முகப்பில் தெரிந்தது. இப்பொழுது அது நீக்கப்பட்டுவிட்டது, என்றாலும், செய்த தவறுக்கு பாரிஸ் திவா மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்காத பட்சத்தில் தமிழ் மணம் ஏன் அவர் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? மேலும அவர் பதிவில் பல புதிய படங்களின் வீடியோக்களையும்(முழுப் படம்) போட்டிருக்கிறார். இது திருட்டு வீடியோ குற்றமில்லையா? குறைந்த பட்ச நாகரிகமும் கிடையாது, குறைந்தபட்ச நேர்மையும் கிடையாதா?

Thursday, September 11, 2008

பிரபல பத்திரிக்கையின் தமிழார்வம்?!

தற்செயலாக "நாணயம் விகடன்" அட்டைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
"ஐ போன்
என் 96
எது பெஸ்ட்?"
என்ற தலைப்பு கண்ணில் பட்டது. ஐ போன் தெரியும். அது என்ன "என் 96" என்று சில நிமிடம் தடுமாறினேன். அப்புறம் அது "N96" என்று புரிந்தது. அடடே, பரவாயில்லையே! தமிழார்வம் ஓவரா இருக்குதே, என்று எண்ணியவாறே வலது புறம் பார்த்தபொழுது(அதே பக்கத்தில்)
"32 பக்க
L.K.G. இணைப்பு
கிரெடிட் கார்டு"
என்று இன்னொரு தலைப்பு. "L.K.G"யை "எல்.கே.ஜி" என்று எழுதினால்கூட எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய அளவில் அந்த வார்த்தை நமக்குத் தெரியும். அதை "LKG" என்றே போட்டிருக்கிறார்கள். ஆனால் N96ஐ "என் 96" என்று போட்டால் எத்தனை பேருக்கு சட்டென்று புரியும். தமிழார்வம் ஓவர்னா LKGஐயும் "எல்.கே.ஜி"னே போட்டிருக்கலாமில்லையா? ஸோ, தமிழார்வம் சுத்தமாயில்லை. அப்புறம் என்ன "என் 96" வாழுது? "N96"னு போட்டா படிக்கிறவனுக்காவது புரியுமில்ல? தமிழார்வம் ஃபுல்லா அரிச்சு போச்சுங்க!!!

Monday, September 8, 2008

கூகிள் க்ரோம் - தமிழ் தட்டச்ச முடியவில்லை

கூகிள் க்ரோமில் சில வசதிகள் இருந்தாலும், பல குறைபாடுகள் இருக்கின்றன. பீட்டா வெர்ஷன் என்பதால் பொறுக்கலாம். நான்கைந்து Tabகளுக்கு மேல் திறந்தால் தொங்க ஆரம்பித்து விடுகிறது. கூகிளின் தளங்களிலேயே கூட சிலது சரியாக திறக்க மாட்டேன்கிறது. முக்கியமாக கூகிளார், யூனிகோடை எப்படி ஹாண்டில் செய்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமாயிருக்கிறது.

நான் தமிழில் தட்டச்ச NHM உபயோகிக்கிறேன். யூனிகோடு தமிழில், மெய்யெழுத்துக்களும், உயிர்மெய் எழுத்துக்களில் அகர வரிசை தவிர மற்றவைகளும், இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துக்களின் கூட்டு எழுத்துக்கள். உதாரணத்திற்கு, க் என்பது "க" என்ற எழுத்தும், புள்ளி என்ற எழுத்தும் சேர்ந்த கூட்டெழுத்து. அதுபோல "ஜே" என்பது "ஜ" மற்றும் "ஏ" எழுத்துக்களின் கூட்டெழுத்து. நமது தட்டச்சு மென்பொருள்கள் எல்லாம், இதை மனதில் வைத்தே வடிவமைக்கப் பட்டவை. ஆனால் க்ரோம், இந்த கூட்டெழுத்துக்களை ஒரே எழுத்தாக பாவிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

சோதித்துப் பார்க்க, ஐ.இயிலோ, ஃபயர் ஃபாக்ஸிலோ ஏதாவது ஒரு தளத்தை(தட்டச்சுவதற்கு உகந்ததாக) திறக்கவும். இப்பொழுது அதில் "க்"என்றை எழுத்தை தட்டச்சுங்கள். பின் பேக் ஸ்பேஸை(Back Space) அழுத்திப் பாருங்கள். "க்" என்பது "க"வாகிவிடும். மேலும் ஒரு முறை பேக் ஸ்பேஸை அழுத்தினால்தான் முழு எழுத்தும் மறையும்.

ஆனால் அதே தளத்தை க்ரோமில் திறந்து, "க்" அடித்து, பேக் ஸ்பேஸை(Back Space) அழுத்திப் பாருங்கள். முதல்முறையே முழு எழுத்தும் அழிந்து விடும். நமது தட்டச்சு செயலிகள் சரியாக க்ரோமில் செயல்படாததற்க்கு காரணம் இதுதான்.

நமது செயலிகள், நாம் தட்டச்சும் பொழுது, நமக்குத் தெரியாமலேயே, இந்த பேக் ஸ்பேஸை பல சமயங்களில் உபயோகிக்கின்றன. நீஙகள் ரோமனைஸ்டு முறையில் தட்டச்சுகிறீர்களென்றால், "க" என்று எழுத "k"யை முதலிலும், "a"யை அடுத்தும் அழுத்துகிறீர்கள். உங்கள் செயலி என்ன செய்கிறது? நீங்கள் "k"யை அடித்ததும் "க்", அதாவது "க"+புள்ளிக்கான குறீயீடுகளை ஸ்கீரீனில் கொட்டி விடுகிறது. அடுத்ததாக "a"யை அழுத்துகிறீகள். இது உயிரெழுத்து. அதனால் முந்தின எழுத்து மெய்யெழுத்தா என்று பார்த்தால் ஆமாம் மெய்யெழுத்து. அதனால், இதை அந்த மெய்யுடன் கலந்து உயிர்மெய்யாக்க வேண்டும். அதாவது மெய்யெழுத்திலுள்ள புள்ளியை நீக்க வேண்டும். இதற்கு சுலபமான வழி ஒரு பேக் ஸ்பேஸுக்கான(Back Space) ஆணையை அனுப்புவதுதான். அதுவே நமது செயலிகளாலும் செய்யப்படுகிறது.

ஆனால் க்ரோம் இப்பொழுது இந்த யூனிகோடு எழுத்துக்களை ஒரே எழுத்தாக பாவிப்பதால், புள்ளி மட்டும் நீங்குவதற்கு பதிலாக முழு எழுத்தும் அழிந்து விடுகிறது. கூகிள்காரர்கள் எந்த ஸ்டான்டர்டை பின்பற்றுகிறார்கள் என்று தெரியவில்லை.

இது எனது சந்தேகம் மட்டுமே. பிரச்சினை வேறு மாதிரியும் இருக்கலாம்.

கடைசியாக வந்த தகவல் : NHM புதிய வெர்ஷன் க்ரோமில் வேலை செய்கிறது. இந்த கடைசித் தகவல் அதன் மூலம் க்ரோமில் தட்டச்சப்பட்டது. தகவல் கொடுத்த பாலாவுக்கும், செயலி எழுதிய நாகராஜ்ஜுக்கும் நன்றி!!!