Tuesday, October 21, 2008

அறிபுனைக் போட்டி முடிவு - ஒரு அதிருப்தி - அறிபுனை எழுத்தாளர்களுக்கு எச்சரிக்கை

நான் இதை எழுதியிருக்கக் கூடாது. இருந்தாலும் மனம் கேட்கவில்லை. சிறில் அலெக்ஸ் நடத்திய அறிபுனைக் கதைகள் போட்டி முடிவுகள் ஒரு வழியாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வசந்தகுமார், ஸ்ரீதர் நாராயணன், சேவியர், மூவரும் பரிசுக்குத் தகுதியானவர்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முதல் பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் கதைதான் ரொம்பவே நெருடுகிறது. போட்டி நடத்தப்பட்டது அறிவியல் புனைக்கதைகளுக்கு. ஆனால் முதல் பரிசு பெற்ற கதை, அந்த வகையில் அடங்காது என்பது எனது கருத்து. அது ஒரு வித்தியாசமான கதையே தவிர, அறிவியல் புனைவு அல்ல. வசந்தகுமார், இந்த போட்டிக்காக கிட்டத்தட்ட 15 கதைகள் எழுதிய நிலையில், அவற்றில் ஒரு அறிவியல் புனைவு கூடவா பரிசுக்கு சிக்கவில்லை?

ஸ்ரீதரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை கூட, போட்டிக்கு வந்த அவரது மற்ற கதைகளை விட சில படிகள் குறைவான கதைதான் என்பது எனது கருத்து. ஆனால் ஒவ்வொருவர் ரசனையும் வேறு விதமாக இருக்கலாம் என்பதாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கதை அறிவியல் புனைவு கூறுக்குள் அடங்குவதாக இருப்பதாலும், இந்த விஷயத்தை விட்டு விடலாம்.

பரிசு கொடுப்பது, மேலும் அது போன்ற ஆக்கங்கள் தொடர்ந்து வர ஊக்குவிப்பதற்குத்தான். அதனால், பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்கள் எழுதிய மற்ற சிறந்த கதைகளை விட, இது போன்ற கதைகளை தொடர்ந்து எழுதினால்தான் அவை அறிபுனை கதைகள் என்று ஏற்றுக் கொள்ளப்படும், என்று மனதளவில் நினைக்கும் அபாயம் நிறையவே இருக்கிறது. போட்டிக்கு எழுதிய மற்ற எழுத்தாளர்களும், அறிவியல் கூறுகளோடு கதை எழுதினால், அவை ஏற்றுக் கொள்ளப்படாது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

அதனால், அறிபுனை எழுத்தாளர்களே!! இந்தப் போட்டியின் முடிவு உங்களது எண்ணங்களையும், ஆக்கங்களையும் பாதிக்காமல், தொடர்ந்து அறிவியல் கூறுகள் கொண்ட அறிபுனை கதைகளையும் எழுதி, தமிழில் அந்தக் கூறு மேன்மேலும் வளரச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!

எனது இந்த நிலையை முதல் பரிசு பெற்ற நண்பர் இரா.வசந்த குமார் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்!!